தருமபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (23.01.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் இரயில்வே திட்டப்பணிகள் 2010-11 கீழ் வெண்ணாம்பட்டி சாலை கி.மீ.0/8-ல் இரயில்வே கடவு எண்.41-க்கு மாற்றாக தருமபுரி- சிவாடி இரயில் நிலையங்களுக்கு இடையில் கி.மீ.65/000-100ல் பாரதிபுரம் 66 அடி சாலையில் சாலை மேம்பாலம் அமைத்தல் மற்றும் இரயில்வே கி.மீ.65/600-700-ல் நடைபாதைச் சுரங்கம் அமைத்தல் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இப்பணியானது கடந்த 01.04.2023 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு ரூ.36.15 கோடிக்கு 23.05.2023 அன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி பணிக்கு நிலஎடுப்பு, முன் ஆயத்தப்பணி மற்றும் சேவைச் சாதனங்களை மாற்றியமைத்தல் பணிகளும், நிலஎடுப்பிற்கான இழப்பீடு தொகை நிலஉரிமையாளர்களுக்கு வழங்கும் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. நிர்வாக ஒப்புதல் பெற்றவுடன் இப்பணிகள் தொடங்கப்படும்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) திரு. பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.கார்த்திகேயன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு. ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
.gif)

