.jpg)
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெலவள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2025) நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய பதப்படுத்தும் இயந்திரங்களை அவர் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
“தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இவை பிஸ்கட், சத்துப்பானம், இனிப்பு, காரவகைகள், மற்றும் காலை உணவுக்கான தயாரிப்புகளுக்காக வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்,”
என அவர் தெரிவித்தார்.
இவ்வகை சிறுதானியங்களை மதிப்பு கூட்டி சந்தையில் விற்பனை செய்யும் முயற்சியில், தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு சிறுதானியம் இயக்கம் 2025-2026ம் ஆண்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 75% மானியத்தில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு 50 டன் சிறுதானியம் பதப்படுத்தப்படும். இதனால் இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள 1000 விவசாயிகள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.
மாநில அரசு வழங்கும் உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.18.75 லட்சம் வரை மானியம் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
பின்னர், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரம், காடையாம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு. இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ஷகிலா மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக