தருமபுரி, மே 29-
மனிதநேயமும், பரிவும் கொண்ட செயல்கள் எந்த வயதிலும் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் ஒரு மனதைத் தொடும் நிகழ்வு சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. புற்றுநோய் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை காரணமாக தங்களது தலைமுடியை இழக்க நேரிடுகிறது. இது அவர்களது மனநிலையை பெரிதும் பாதிக்கக்கூடியது. இப்படிப்பட்ட நிலையில், அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக தலைமுடி வழங்கும் செயல் ஒரு உயரிய தானமாகும்.
மை தருமபுரி என்ற சமூக சேவை அமைப்பின் முயற்சியில், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தலைமுடி தானம் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், தருமபுரி மாவட்டம் எஸ்.வி சாலையில் உள்ள டான் சிக்ஷாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் தியானா என்ற சிறுமி தனது கூந்தலை தானமாக வழங்கினார். தியானா, நல்லம்பள்ளியைச் சேர்ந்த பாமக ஒன்றிய செயலாளர் ஓகே. கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆவார்.
ஒரு 12 வயது மாணவி தனது தலைமுடியை தானமாக வழங்கும் அளவுக்கு பரிவு கொண்டிருப்பது, மனிதநேயத்தின் மிக அழகான உருவாகும். இது தனது வயதைக் கடந்த ஒரு பெருந்தன்மையை பிரதிபலிக்கிறது. தியானாவினது செயல், நம்மில் பலருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், இளம் தலைமுறையில் சமூகப்பணி குறித்து ஒருவகையான சிந்தனையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஷ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு தியானாவை பாராட்டினர். மேலும், மாணவிக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக