இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ் நாடு அரசு நிதி நிறுவனம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தருமபுரி கிளை அலுவலகத்தின் (முகவரி : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் , DDDC Building, பென்னாகரம் ரோடு, தருமபுரி - 636 702) சிறு குறு மற்றும் நடுத்தரத் (MSME) தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் முகாம் இன்று முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது.
இச்சிறப்பு தொழில் கடன் முகாம் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசின் மானியங்கள் (25% மூலதன மானியம், மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75.00 இலட்சம் வரை வழங்கப்பபடும். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) மற்றும் அதன் சலுகைகள் குறித்து விளக்கப்பட உள்ளன.
இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04342-260866, 260272 மற்றும் 94443 96889, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpeg)