மாவட்ட வள மையம் (DRCP) - திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

மாவட்ட வள மையம் (DRCP) - திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி (SCPAR-2020-2021) திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையம் (DRCP) - திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (18.11.2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையம் (DRCP) - திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த பணிகள் குறித்த பயிற்சி மற்றும் பயிலரங்கு பணிகளை அனைத்து ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு அளித்திட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் (SCPAR) ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வள மைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. 


இக்கட்டடத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள். மாவட்ட வள மையம் (DRCP) - திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டடமானது ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி மற்றும் பயிலரங்கு பயன்பாடுகளை நோக்கமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. 


இப்புதிய கட்டடம் 241.58 சதுர மீட்டர் (2555 சதுர அடி) அளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்வளமையத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன.


இப்பயிற்சிகள் மற்றும் பயிலரங்குகள் மூலம் அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வாயிலாக பொதுமக்களுக்கு எளிதில் சென்றடைவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் பெரிதும் பயனடைவர்.


இக்கட்டட திறப்பு விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்ட வருவாய் அலகில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஜம்மனஅள்ளி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.கே.சந்தோசம் என்பவர் கடந்த 14.12.2019 அன்று பணியிடையில் எதிர்பாராத விதமாக மரணமடைமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகன் திரு.ச.சதீஷ் என்பவர் கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளராக தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டு, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை இன்று (18.11.2022) திரு.ச.சதீஷ் அவர்களுக்கு வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.எஸ். ஸ்ரீனிவாசன், உதவி செயற்பொறியாளர் திரு.பாலாஜி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad