தருமபுரியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2022 அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

தருமபுரியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2022 அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட, சேலம் - தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள டி.என்.சி. விஜய் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2022, மாவட்ட அளவிலான விழா இன்று (18.11.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார். 

இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசும்போது தெரிவித்தாவது:


கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உயர்ந்த கொள்கையை கொண்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. என்னுடைய முதல் சேவை கூட்டுறவு சங்கத்தில் தான் தொடங்கியது. நான், எங்கள் பகுதியில் உள்ள மோவூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பணியாற்றினேன். அதேபோல் வட்ட வீட்டு வசதி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினேன். அங்கு சிறப்பாக பணியாற்றி, நல்ல அனுபவத்தை பெற்றதன் காரணமாக தான் அரசியல் சேவையில் சிறப்பாக செயல்பட முடிகின்றது. அதற்கு சிறப்பான பயிற்சி எனக்கு கிடைத்தது கூட்டுறவு சங்கங்களின் மூலமாக தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டுறவு சங்கங்கள் என்பது விவசாயிகளுக்கு சிறந்த சேவை அளிக்கின்ற சங்கங்களாகும்.


மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தான் விவசாயிகளுக்கு 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்தும் வகையிலான வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் திட்டத்தினை அறிவித்து, செயல்படுத்தினார்கள். விவசாயிகள் பெறுகின்ற கடனை ஆறு மாதத்திற்குள் திரும்ப செலுத்தினால் அப்போது வட்டியே கிடையாது. அதனுடைய பலன் தான் விவசாயிகளுக்கு பெரும் வளர்ச்சியாக அமைந்தது. விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ பெரிய வங்கிகளுக்கு சென்று கடன் கேட்கின்ற பொழுது, அவ்வளவு எளிதாக அவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளாக இருந்தாலும், தொழில் அதிபர்களாக இருந்தாலும், தொழிலாளர்களாக இருந்தாலும் அச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மிக எளிதில் கடன் கிடைத்து விடுகின்றது.


தொழிலதிபர்கள் பயனடைய பெரிய வங்கிகளுக்கு செல்வார்கள். ஆனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவதற்கு கூட்டுறவு சங்கங்கள் தான் பெரிதும் உதவியாக இருக்கின்றது. வேளாண்மைக்கும், வேளாண் சார்ந்த தொழில்களுக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அதிக கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் வேளாண் சார்ந்த மாவட்டமாக இருந்து வருகின்றது. கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக இருக்கின்றது. கறவை மாடுகள் வளர்ப்பின் மூலம் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யக் கூடிய மாவட்டம் தருமபுரி மாவட்டம். கறவை மாடு வளர்ப்போர் தங்களது கறவை மாடுகளை பராமரிப்பதற்கு, ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14,000/- வரை வட்டியில்லாத கடனுதவி வழங்கப்படுகின்றது.


பெறுகின்ற இக்கடனை 6 மாதத்திற்குள் திரும்ப செலுத்தினால் வட்டி கிடையாது. இத்தகைய கடனுதவி கறவை மாடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களில் கால்நடை பராமரிப்புக்கான கடனுதவி பெற்று பயன்பெறலாம். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் துறை, விவசாயிகளின் நெருங்கிய துறையாக விளங்குவதும் கூட்டுறவுத் துறை ஆகும். மக்களுடனும், விவசாயிகளுடனும் கூட்டுறவு சங்கங்கள் சுமுகமான உறவு கொண்டிருந்தால் தான் விவசாயிகளும், கூட்டுறவு சங்கங்களும் வளர்ச்சி பெறும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தார்கள். 


அதேபோல தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் 5 பவுன் வரை நகை கடன் அறவே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் ஐந்தாயிரம் கோடிக்கு மேல் 5 பவுன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 39537 நபர்களுக்கு ரூ.157.02 கோடியில் 5 பவுன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 39537 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், மகளிர் குழுவினருக்கான கடன் ஏறத்தாழ இரண்டாயிரத்தி ஐநூறு கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளும், ஏழை, எளியோர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் எளிதில் கடனுதவி கிடைப்பது கூட்டுறவு சங்கங்களில் மட்டும் தான். அவ்வாறு பெறுகின்ற கடனுதவிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தினால், கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாக செயல்படும், கூட்டுறவாளர்களாக உள்ள மக்களுக்கும் மிகுந்த பயன் கிடைக்கும். 


எனவே, வாங்குகின்ற கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த முன்வர வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை டெபாசிட் செய்யும் பொழுது, சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றன. இதனால் மக்கள் தங்கள் பணத்தை இழந்து ஏமாறுகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க மக்கள் நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைக்கேற்றவாறு கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், தருமபுரி மாவட்டத்தில் 520 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 495 முழுநேர நியாய விலைக்கடைகளும், 582 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1077 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலைக் கடைகளில் 4,67,256 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியன விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 31.10.2022 வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 21907 விவசாயிகளுக்கு ரூ.176.15 கோடி குறுகிய கால பயிர்க்கடன்கள் உள்ளிட்ட இதர கடன்கள் 91759 நபர்களுக்கு ரூ.681.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தோடிக்கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயம் செழிப்பாக உள்ளது. இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கருக்க மேல் கூடுதலாக விவசாயம் செய்யப்படுகின்றன. கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் விதமாக ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள். இதனால் தருமபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும். அதேபோல், ஒகேனக்கல்லிருந்து காவிரியில் வருகின்ற தண்ணீர் அதிகமாக கொள்ளிடத்தில் சென்று வீணாக கடலில் கலக்கின்றது. 


இந்த தண்ணீரை தருமபுரி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்புவதற்கான உபரிநீர் திட்டம் அரசின் பரீசிலனையில் இருந்து வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்குவதற்கு தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் இவ்விழாவின் மூலம் 1233 பயனாளிகளுக்கு ரூ.10.30 கோடி அளவிற்கு பல்வேறு கடன்உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்கள் கூட்டுறவு சங்கங்களை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, இச்சங்கங்களின் மூலம் வழங்கப்படுகின்ற கடனுதவிகளை பெற்று, பயன்படுத்தி தங்களின் வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திகொள்வதோடு, பெற்ற கடன்களை முறையாக திருப்பி செலுத்தி கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கும் உதவிட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக இன்று நடைபெற்ற 69-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியான ”கூட்டுறவாளர்களாகிய நாம் இந்திய நாட்டின் முன்னேற்றம், ஒருமைப்பாட்டிற்கு நம்மால் இயன்ற வகைகளில் எல்லாம் பணியாற்ற உறுதி கொள்கிறோம். உலகின் அனைத்துப் பகுதிகளில் உள்ள கூட்டுறவாளர்களுடன் சேர்ந்து, ஒருமனதாக பாடுபடுவதுடன் பல்வேறு நாடுகளிடையே நிலையான சமாதான நல்வாழ்வை ஏற்படுத்த பாடுபடுவதென உறுதி கொள்கிறோம். உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், வாழ்வில் பின்தங்கியுள்ளவர்களின் சமூகப் பொருளாதார நிலை மேம்படவும் பாடுபடுவது, கூட்டுறவு நிறுவனங்களின் இலட்சியம் என்பதால் அந்த மகத்தான பணியில் கூட்டுறவாளர்களாகிய நாம் தீவிரமாக ஈடுபட்டு தொண்டாற்ற உறுதி கொள்கிறோம்.


கூட்டுறவே! நாட்டுயர்வு!! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!! இந்த இலட்சிய உணர்வு எங்கும் ஒலித்து இன்ப கீதமாக இந்த நாட்டில் எழுச்சி உருவாக, கூட்டுறவுத் தத்துவங்களை அனைத்து வகையிலும் கடைபிடித்து, அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோமென உறுதி கொள்வோம்” என்ற உறுதிமொழியினை வாசிக்க கூட்டுறவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பாக செயல்பட்ட 21 கூட்டுறவு சங்கங்கள், 4 செயற்பதிவாளர் சங்கங்களுக்கு கேடயங்களையும், பொதுவிநியோகத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 17 சிறந்த விற்பனையாளர்களுக்கு பரிசுகளையும், கூட்டுறவு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 134 பணியாளர்களுக்கு பரிசுகளையும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவ, மாணவியர்களுக்கும், வழங்கினார்கள்.


இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.8,87,500/- மதிப்பீட்டில் சிப்பம் கட்டும் அறைகள், வெங்காய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான மானிய நிதி உதவிகளை வழங்கினார்கள். மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1184 விவசாயிகளுக்கு ரூ.9,10,66,400/- மதிப்பீட்டிலான பயிர்க்கடன் உதவிகளையும், 2 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.14,35,000/- கடன் உதவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,48,000/- சுய தொழில்களுக்கான கடன் உதவிகளையும், 18 சிறு வணிகர்களுக்கு ரூ.7,50,000/- சிறு வணிக கடன் உதவிகளையும், 26 பயனாளிகளுக்கு ரூ.94,60,000/-க்கான ஆதார கடன் உதவிகளையும் என மொத்தம் 1233 பயனாளிகளுக்கு ரூ.10,29,59,400/- (ரூ.10.30 கோடி) மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளையும் வழங்கினார்கள்.


இவ்விழாவில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.மா.லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர்/ அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திரு.ரஹமதுல்லா கான், மாவட்ட வருவாய் அலுவலர்/ பாலக்கோடு, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திரு.ந.சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் திரு.மா.சந்தானம், பாலக்கோடு, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் திரு.தொ.மு.நாகராஜன் உட்பட கூட்டுறவாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad