ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.. அவ்வகையில் தருமபுரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 24.02.2022, 25.02.2022 ஆகிய இரு நாள்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகக் கூடுதல் கூட்ட அரங்கில் நடத்தப்பெற்றன.

இப்பயிலரங்கில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள். தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சியாக 24.02.2022 அன்று ஆட்சிமொழிப் பயிலரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (மு.கூ.பொ) திருமதி தே . செயசோதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சு. அனிதா அவர்கள் தலைமையுரை ஆற்றிப் பயிலரங்க நிகழ்வுகளை இனிதே தொடங்கி வைத்தார்.

மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் க. சிவசாமி அவர்கள் ஆட்சிமொழி வரலாறு / சட்டம் மற்றும் ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்புகளில் பயிற்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது மற்றும் கபிலர் விருது பெற்ற விருதாளர் புலவர் வெற்றியழகன் அவர்கள் மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.

இரண்டாம் நாள் முற்பகல் நிகழ்வாக ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி தே. செயசோதி அவர்களும், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு. ப. கோவிந்தராசு அவர்களும், மொழிப்பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்ட அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ப. கிள்ளிவளவன் அவர்களும் பயிற்சி அளித்தனர்.

கருத்தரங்கப் பிற்பகல் நிகழ்வாக கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்க நிகழ்வில் அரூர், பெரியார் உறுப்புக் கல்லூரி, தமிழ்த் துறை தலைவர் முனைவர் வெ. சஞ்சீவராயன், கொத்துமாரன அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, தமிழாசிரியர் திரு.சி. அரிபிரசாத், தருமபுரி மாவட்டத் தூயத் தமிழ்ப் பற்றாளர் விருதாளர் செல்வன் த. தங்கமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இறுதியாக ஒப்பந்தத் தட்டச்சர் திரு. வே.கண்ணதாசன் அவர்கள் நன்றியுரை ஆற்ற நாட்டுப் பண் பாடலுடன் கருத்தரங்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இவ்வாறு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்(பொ) தருமதி. தே. ஜெயஜோதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad