தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு 3 வயது பெண் குழந்தையுடன் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி சத்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெங்கடேஷின் தாயார் முனியம்மாள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும், கொடுக்காவிட்டால் தன்னுடைய மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக மிரட்டி வருவதாகவும், இது சம்பந்தமாக கடத்தூர், அரூர் காவல் நிலையங்களிலும் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தற்பொழுது யார் ஆதரவும் இல்லாமல் தன்னுடைய தாய் வீட்டில் 3 வயது பெண் குழந்தையுடன் கஷ்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வரதட்சணைக்காக தன்னை ஒதுக்கி தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை மருமணம் செய்ய இருக்கும் தனது மாமியார்; மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தனது 3 வயது பெண் குழந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சத்யாவை மீட்டு தீக்குளிக்கும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெருவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு அளிப்பது தடை செய்யபட்டுள்ளதால் பொது மக்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அங்குள்ள புகார் பெட்டியில் அளிக்க மட்டுமே இயலும். எனவே ஒவ்வொரு திங்கள் கிழமையும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் மனு அளிக்க வருகின்றனர்.
அப்போது சிலர் தங்களது கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் மனவேதனையடையும் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே காவல் துறையினரின் பாதுகாப்பையும் மீறி தொடர்ந்து உடல் மீது மண்ணெண்ய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக