தருமபுரி அருகே விபத்தில் காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் மகன் பலியானார். சேலம் போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் துரைசாமி. இவருடைய மகன் தமிழ்பாண்டியன் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பணிக்காக பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுக்காரனூர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்பாண்டியன் படுகாயம் அடைந்தார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக