தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 490 மனுக்கள் பெறப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 490 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி, மே 26 – 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 490 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குடிநீர், சாலை, பேருந்து வசதி, அரசுத் திட்ட உதவிகள், பட்டா, குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், செம்மொழி தமிழின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதியை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.


இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் பரிசுகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். மாநில அளவில் பேச்சுப் போட்டியில் தருமபுரி அரசு மாதிரிப்பள்ளி மாணவி செல்வி மு. கோகிலா மூன்றாம் இடத்தையும், வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி மாணவர் செல்வன் த. தங்கமுத்து இரண்டாம் இடத்தையும் பெற்றதை ஆட்சித்தலைவர் பாராட்டினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திருமதி வே. ஜோதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திரு. கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad