தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பல்வேறு அறிவிப்புகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பல்வேறு அறிவிப்புகள்.


தருமபுரி, மே 30 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறப்பட்டது.


இந்தக் கூட்டத்தில், 2023-24ஆம் ஆண்டு தமிழக அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு சிறந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்களுடன் வாழ்த்து பெற்றனர். மாநில அரசின் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டு வந்து செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதம் வரை 238.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான உணவுத் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடிக்கு 1,72,280 ஹெக்டேரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 1360 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் பயன்படக் கூடிய விதைகளும், உரங்களும் போதிய அளவில் மாவட்டத்திலுள்ள விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளதாகவும், மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


திருத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது வரை 9043 விவசாயிகள் 7382 ஏக்கர் பரப்பளவுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் இந்த ஆண்டிற்காக 542 ஏக்கர் பரப்பளவில் மல்பரி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 2025 வரை 33 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 745 விவசாயிகள் ரூ.756.86 கோடி மதிப்பில் பயிர்கடன்கள் பெற்றுள்ளனர். சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை இருபதும், உரங்களும் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகளுக்கு அரசு திட்டங்களை நேரடியாக எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.


இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு மற்றும் பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad