தருமபுரி, மே 29-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான காணொலிக் காட்சி நிகழ்ச்சியின் வாயிலாக, “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம் திருவாரூர் மாவட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், அடிலம் ஊராட்சியில் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி ஆகியோர் பார்வையிட்டு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கான ஆலோசனைகள், பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் பற்றிய கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு துவரை செயல்விளக்கம் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு உளுந்து மினிகிட்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து, 5 தனிநிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு ரூ.1,94,076 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2025-26ஆம் ஆண்டு அறிக்கையில் “உழவர்களைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 17,116 கிராமங்களில் அமலாக்கம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாதம் இருமுறை (இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும். இதில், வட்டார அலுவலர்கள், சார்புத்துறைகள் மற்றும் விஞ்ஞானிகள் நேரடியாக உழவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணாபுரம், இலளிகம், பாலக்கோடு, அடிலம், சிகரலஅள்ளி, கெலவள்ளி, கொளகம்பட்டி, மோளையானூர் உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா, வேளாண் வணிகம் துணை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அலுவலர்கள், விவசாய சங்கங்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக