தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (20.03.2023) நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 532 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி வட்டார வணிக வள மையம், மொரப்பூர் வட்டாரம் சார்பில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 8.00 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.8,60,000/- (ரூ.8.60 இலட்சம்) மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.எஸ்.கண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.பத்ஹி முகம்மது நசீர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக