தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அவற்றுள் ஒன்றாக நுண்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்கள் இவற்றை கற்பதற்கென ஒவ்வொரு வாரத்திலும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு அருகில் உள்ள நடன, நாடக, இசைக் கலைஞர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக, இக்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளி அளவில் கலை விழாக்கள் நடத்தப்பட்டு அதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வட்டார அளவிலான கலைத் திருவிழாக்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதில் வெல்பவர்கள் மாவட்ட அளவிலான கலைவிழாக்களிலும் அதன் வெற்றியாளர்கள் ஆண்டு இறுதியில் மாநில அளவில் நடக்கும் கலைத் திருவிழாவிலும் பங்குகொள்வார்கள்.
இந்த வகையில் அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் தலைமையாசிரியர் சென்றாயன் தலைமையில், கலை இலக்கிய, பண்பாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவர்கள் இசைக்கருவிகள் வாசித்தல், பாவனை நடிப்பு, பம்பை அடித்தல், சிலம்பம், பாட்டுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், கவிதை வாசித்தல், ஓவியம் வரைதல், நாடகம் நடித்தல், கையெழுத்துப் போட்டி போன்றவைகளில் தங்கள் திறன்களை நிரூபித்தனர்.
இவ்விழாவில் உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், உடற்கல்வி ஆசிரியை கோவிந்தம்மாள், கலை பண்பாட்டு பொறுப்பாசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக