நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க தருமபுரி மாவட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டிற்கு மொத்த இலக்கு எண்ணிக்கை 4 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3 நபர்கள் ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 நபர் பழங்குடியினருக்கும் தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.20.00 இலட்சம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அரசாணை எண்.79ல், நான்,10.09.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பில் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க தலா ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அரசாணையில் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும்.

மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகள் பெயரில் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் மூன்று இலட்சம் மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்கவேண்டும், விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்ககூடாது. வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும்.
நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.
இத்திட்டத்தின் பயன்பெற ஆதிதிராவிடர் http://application. tahdco.com என்ற முகவரியிலும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக