தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்துதல் தொடர்பாக மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மதிவேந்தன் அவர்கள் இன்று(11.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ளது ஒகேனக்கல் அருவி. இங்கு காவிரி ஆறு பல அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், இது தென்னிந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுகிறது. மிகப் பிரபலமான இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வனத் துறை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரித்தல், அழகுற நடைபாதை அமைத்தல், வண்ண மீன் கண்காட்சியகத்தில் மீன்கள் முறையாகப் பராமரித்தல், அருவியின் அழகைக் காண கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல், சினி அருவியில் அனைவரும் சென்று நீராடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தல், ஐந்தருவியை ஒரே இடத்தில் நின்று பார்வையிட உயர் கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல், இவை தவிர, வாய்ப்புள்ள இடங்களில் நீரை தடுத்து, செயற்கையான அருவியை உருவாக்குதல், ஒகேனக்கல் முகப்பில் இதுகுறித்து விவரங்களை அறியும் வகையில் பதாகைகள் அமைத்தல், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை இன்று பார்வையிட வந்தோம். அருவிகள் நடைபாதை மற்றும் பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டோம். இங்குள்ள வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கழிப்பிட வசதிகள் ஆடைமாற்றும் அறையில் ஆயில் மசாஜ் செய்யும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒகேனக்கலில் தற்போது தண்ணீர் அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து குறையும் போது பரிசீலிக்க அனுமதிக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் மேற்கொள்ளவும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருடன் விரைவில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். சுற்றுலாத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தனி கவனம் அளிக்கப்பட்டு மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக ஒகேனக்கல் விளங்கிவருகிறது.
குரோனா காலத்திற்கு முன்பு சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்துள்ளனர் தற்போது குறுகிய காலத்தில் பதினோரு லட்சம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து சென்றுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் ஆந்திரம் கேரளம் புதுவை மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு பெருமையாக ஒகேனக்கல் விளங்கி வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு சுற்றுலா தளத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒகேனக்கலில் புராணகாலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதி மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி(பென்னாகரம்), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன்(தருமபுரி) கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.வைத்திநாதன்,இ.ஆ.ப.,மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஸ்ரீபாலமுருகன், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.பாலமுருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர் திரு திரு.ஜெகதீசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக