தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (11.10.2021) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 386 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.1,47,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், இலவச சலவைப்பெட்டிகள், முடிதிருத்தும் உபகரணங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871/- வீதம் ரூ.92,549 /- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகள் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.2,39,549/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் காடந்த வாரம் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீடு வழங்கிட கோரி விண்ணப்பித்த நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சோர்ந்த திரு.செல்வக்குமார் என்பவரது மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.1.70 இலட்சம் மதிப்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நிதியுதவிக்கான ஆணையினையும், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சோர்ந்த திரு.மாதையன் என்பவரது மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.1.38 இலட்சம் மதிப்பில் மாட்டுக்கொட்டகை அமைப்பதற்கான நிதியுதவிக்கான ஆணையினையும், காடந்த வாரம் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உட்பிரிவு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த திருமதி.பாரதி என்பவரது மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவாய்த்துறையின் சார்பில் உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.வைத்திநாதன்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்தையன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அ.அய்யப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி.சிவகாந்தி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக